22 ஆகஸ்ட் 2020 தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2020

நாள் :22 ஆகஸ்ட் 2020

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : விநாயகசதுர்த்தி அன்று வழங்கப்பட்ட சிறப்பு சத்சங்கம்-கைலாச ரிசர்வ் வங்கி

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10 லட்சம்

வீடியோ

22 ஆகஸ்ட் 2020 தியான சத்சங்கம்- தமிழ்


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

22 ஆகஸ்ட், 2020, விநாயகசதுர்த்தி அன்று இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சிறப்பு தமிழ் சத்சங்கம்...

உங்கள் அனைவரையும் அன்புடனும், மரியாதையுடனும் வணங்கி வரவேற்கிறேன். முதலில் கணேச சதுர்த்தியான இன்று முழுமுதற் பரம்பொருளான பரமசிவ கணபதியை, பரம்பொருளை, விநாயக பரம்பொருளை வணங்கி வழிபட்டு பின் சத்சங்கத்திற்குள் நுழைவோம். பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்தி கைலாயத்திலிருந்து... விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நீங்கள் எல்லோரும் எல்லாவிதமான ஆனந்தங்களையும் பெற்று, எல்லாவிதமான நன்மைகளையும் பெற்று, பரம்பொருள் விநாயகப் பெருமானின் பேரருளாலே பதினாறும் பெற்று ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ, வாழையடி வாழை என வாழ்ந்திட எம்பெருமான் பரம்பொருள் விநாயகப் பெருமான் அருள் செய்திட, பரமசிவ பரம்பொருளின் அருள் நமக்கெல்லாம் கூட்டி வைக்க வேண்டுகிறேன்.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி விநாயக சதுர்த்தியான இன்று காலையிலேயே பரம்பொருள் விநாயகப் பெருமானின் பேரருளால் பரமசிவ பரம்பொருளின் பேரருளால் திருக்கயிலாயத்திற்கான கைலாஸா வங்கியும் (ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாஸா), திருக்கைலாயத்தின் நாணயங்களான பொற்காசு என்று தமிழிலும், ஸ்வர்ண முத்திரை அல்லது ஸ்வர்ண புஷ்பம் என்று சம்ஸ்கிருதத்திலும், கைலாஷியன் டாலர் என்று ஆங்கிலத்திலும் வழங்கப்படும் நாணயங்களை அறிமுகம் செய்தோம். திருகைலாயத்தின் பொருளாதார கொள்கைகள், பொருளாதார செயல்பாடுகள், செயல்முறைகள் பற்றிய நீண்ட ஆய்வறிக்கையும் கொள்கை விளக்கமும் இப்போது தயாராக உள்ளது. அவைகளை எல்லாம் வெளியிட்டு காலையில் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்ட செய்திகளை இப்போது உங்களிடம் தமிழிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் நான் சொல்ல விரும்புகின்ற ஒரு சிறிய அறிமுகம்: ஹிந்து மதம் ஒரு காலத்தில் குமரிக்கண்டம் உட்பட 56 தேசங்களை கொண்டிருந்தது. இந்து மதத்தின் பல்வேறு சம்பிரதாயங்கள் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு, இந்த ஐம்பத்தாறு தேசங்களின் அதிகாரப்பூர்வமான மதமாகவே இந்து மதம் இருந்து வந்தது. கடலுக்குள் முழுகிய குமரிக்கண்டமானது தென்னகத்தின் தொடர்ச்சியாக இலங்கை, ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா வரை பரந்திருந்தது.

நான் செய்த ஆராய்ச்சிகள் மற்றும் என்னுடைய உளப்பூர்வமான உள்ளார்ந்த முடிவுகள் - இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்பொழுது, குமரிக்கண்டம்தான் இந்து மதத்தின் "மூல"மாக இருந்துள்ளது. அங்கு தமிழும் சம்ஸ்கிருதமும் பயன்பாட்டு மொழிகளாக இருந்துள்ளன. வேதங்களும் ஆகமங்களும் சார்ந்த மூத்த நாகரீகமாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி நாகரீகம் வாழ்ந்திருக்கின்றது. தமிழன், இறைவனோடும் பிரபஞ்ச சக்திகளோடும் உரையாடவும், உறவாடவும் - சமஸ்கிருதத்தையும், தங்களுக்குள் உரையாடவும், உறவாடவும் - தமிழையும் உபயோகப்படுத்திருக்கிறான். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், எம்மொழியும் உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு காரணத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன. மிகுந்த நேர்மையோடு நான் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் நான் கண்டறிந்த உண்மைகள் இதுதான்.

இந்த 56 தேசங்களிலும், கீழடி தொடங்கி சிந்து சமவெளி நாகரிகம் வரை, வேறுவேறு காலகட்டத்திலே புழக்கத்தில் இருந்த இந்து மதம் சார்ந்த வேதங்கள் ஆகமங்களிலே மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்ற பொருளாதர கொள்கைகள், கருத்துக்கள் மற்றும் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த மரபுசார்ந்த அறிவு முறைகள் போன்றவற்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக 8 சந்நியாசிகள் கொண்ட குழுவின் உதவியோடு நீண்ட ஆராய்ச்சிகள் செய்தோம். அதன் சாரம் தான் இப்போதைய திரு கைலாயத்தின் பொருளாதார கொள்கையும் நாணயங்களின் வடிவமைப்பும். அவற்றை வகுத்தும் தொகுத்தும், கைலாயத்தின் பொருளாதார கொள்கைகளையும் நாணயங்களையும் அமைத்துள்ளோம்.

இன்னொன்றும் சொல்ல விரும்புகின்றேன், I wanted to put it on record இந்த 56 தேசங்கள் இப்போது இந்துமத நாடுகளாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. அவைகளில் பல இஸ்லாமிய நாடுகளாகவும் Secular எனப்படும் மதச்சார்பற்ற நாடுகளாகவும் மாறியிருக்கின்றன. அன்று காந்தாரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஆப்கானிஸ்தானம், நேபாளம், அன்று கடாரம் என சொல்லப்பட்ட இன்றைய மலேசிய நாட்டில் இருக்கின்ற பகுதி இவைகளெல்லாம் ஒரு காலத்திலே இந்த 56 இந்து தேசங்களாக இருந்திருக்கின்றன. இப்பொழுது அவைகள் இந்து தேசங்களாக இருக்கின்றன என்று நான் சொல்லவில்லை. மிகத்தெளிவாக சொல்லுகின்றேன், அதுமட்டுமல்லாது, இந்த 56 தேசங்களின் எந்த நாட்டின் நிலப்பரப்பு மீதோ அல்லது வேறு எந்த விதமான உரிமையையும் நாங்கள் கோரவில்லை.

ஒரு காலத்திலே இந்த 56 இந்து தேசங்களில் இருந்த இந்து மதத்தின் பொருளாதாரக் கொள்கைகள், நாணய அமைப்பு போன்றவைகளை உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் "விதை வங்கி" அளவிலாவது உயிரோடு வைத்துவிட வேண்டும் என்கின்ற எங்கள் விருப்பத்தின் மிகச்சிறிய பணிதான், பரமசிவனின் காலடியில் நாங்கள் அர்ப்பணித்திருக்கும் பணிதான் பரம்பொருளின் ஆசியோடு விநாயகப் பெருமான் பேரருளோடு மலர்ந்திருக்கும் இந்த கைலாயத்தின் ரிசர்வ் வங்கி மற்றும் கைலாயத்தின் நாணயங்கள் !!!

நான் மிகத்தெளிவாக இங்கு சில கருத்துக்களை பதிவிட விரும்புகின்றேன். 1. இந்த 56 தேசங்களில் எந்த நாட்டின் நிலப்பரப்பு சார்ந்தோ அல்லது வேறு எந்த விதமான உரிமையையும் நாங்கள் கோரவில்லை. 2. நான் எந்த நாட்டிற்கும் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. ஹிந்து மதத்தை உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் "விதை வங்கி" அளவிலாவது உயிரோடு வைத்துவிட வேண்டும் என்கின்ற எங்கள் விருப்பத்தின் மிகச்சிறிய முயற்சிதான் இந்த கைலாயம். 3. எந்த விதத்திலும் நான் இந்தியாவுக்கு எதிரி அல்ல. இந்தியாவிற்கும், இந்து மதத்திற்கும் அர்ப்பணித்து உழைக்க வேண்டும் என்றுதான் என் வாழ்க்கையை துவங்கினேன். 16 வயதில் என்னுடைய குருமார்கள் எனக்கு யோக பட்டாபிஷேகம் செய்து, என்னை ஆச்சாரிய பீடத்தில் அமர வைத்து, என் பொது வாழ்க்கையை துவங்கி வைத்தார்கள். அன்றிலிருந்து என் வாழ்க்கையை அர்ப்பணித்து சேவைகள் செய்ய துவங்கினேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக, இப்பொழுது, இந்தியாவின் ஊடகத்துறை, நிர்வாகத்துறை என எல்லா துறைகளுக்குள்ளும் ஆக்டோபஸ் மாதிரி ஊடுருவி, நாட்டினுடைய கட்டமைப்புக்குள்ளேயே ஆழ்ந்து ஊடுருவி இருக்கின்ற ஹிந்து விரோத, இந்திய விரோத தீவிரவாத கும்பல் இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் வலுவூட்டுகின்ற என்னுடைய நேர்மையான சிந்தனைகள், செயல்பாடுகள் மற்றும் நான் செய்யும் சேவைகள் போன்றவற்றை சகித்துக் கொள்ள இயலாமல் என்மீது தொடர் கொலை முயற்சி தாக்குதல்களை மேற்கொண்டது. அதோடு மட்டுமல்லாது கொலையை விட மோசமான செயலான மானபங்கம் செய்தல், சட்டத்தை வளைத்து தவறாக உபயோகப்படுத்தி என்மீது போர்த்தாக்குதல் நடத்துதல் என பலவகைகளிலும் என்னுடைய வாழ்க்கையையும் அடையாளத்தையும் அழிக்க பலமுறை முயன்றது இந்த ஹிந்து விரோத, இந்திய விரோத தீவிரவாத கும்பல்.

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த, தாய்மண் மதங்களின் மீது இந்த கும்பல் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான விரோதத்தினால், இந்து மதத்திற்காக சிந்திக்கின்ற, செயல்படுகின்ற யாரையும் அவர்கள் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் ! என்றாவது ஒருநாள், தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் நான் சொல்லுகின்ற இந்த எல்லா வார்த்தைகளின் பொருளையும் புரிந்து கொள்வீர்கள் !!! பசுத்தோல் போர்த்திய புலிகள், இந்து விரோத தீவிரவாத கும்பல் எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பதனால், சட்டத்தையும் வளைத்து ஒருவர் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கஅவர்களால் முடியும், இதைத்தான் Law fare என்று சொல்லுகிறேன். சட்டத்தை போர் நடத்துவதற்காக உபயோகித்தல் என்பது மிக மிகக் கொடூரமான குள்ள நரித்தந்திரமான வேலை. இது போன்ற எல்லாவிதமான தாக்குதல்களும் என் மீது நடத்தப்பட்டதனால் வேறு வழியே இல்லாமல், இந்திய சமூகத்தில் இருந்து என்னை நான் பிரித்துக்கொண்டேன். உயிருள்ளவரை இந்து மதத்திற்காக உழைப்பேன். என் காலத்திற்குப் பிறகு, நான் உடலை விட்ட பிறகு என்னை சுற்றி இருக்கும் செல்வங்கள், உடல் உட்பட, எல்லாமே இந்தியாவிற்கு சொந்தம் என்று உயிலும் எழுதி விட்டேன், இன்று உலகிற்கும் உரை செய்து, சொல்லி இதை தெளிவுபடுத்தி விடுகின்றேன். I am putting it on record, எனக்கு அளிக்கப்படும் அன்பளிப்புகள், நன்கொடைகள், என் உடல் உட்பட, நான் உருவாக்கி வைத்திருக்கின்ற இந்த கைலாச சாம்ராஜ்ஜியம் முழுவதும், என்னுடைய காலத்திற்குப் பிறகு இந்தியாவிற்கே சொந்தம்.

முக்கியமாக மூன்று நகரங்கள், திருவண்ணாமலை, மதுரை , காஞ்சிபுரம் இந்த மூன்று நகரங்களில் இயங்கும் குருபரம்பரைக்கு சொந்தம். இந்த குரு பரம்பரையை பற்றிய தெளிவான விளக்கத்தையும் என்னுடைய உயிலில் தெளிவாக வடிவமைத்து விட்டேன். இவை அனைத்தும் என் காலத்திற்குப் பிறகு இந்தியாவிற்கே சொந்தம். வேதங்களிலும் ஆகமங்களிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் திருமுறைகளிலும் சித்தாந்தத்த சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள், சத்தியங்கள் மற்றும் அவற்றை மரபாக கடைபிடிக்கும் வாழ்க்கை முறை- இவை எல்லாவற்றின் மொத்தத் தொகுப்புதான் 'மரபு சைவம்' என்று என் பாட்டனார் சொல்லுவார். இவைகள் எல்லாவற்றையும் சார்ந்து, பல்வேறு காலகட்டங்களில் இந்த 56 தேசங்களிலும், புழக்கத்திலிருந்த, 800க்கும் மேற்பட்ட நாணய மாதிரிகளை, எல்லா புகைப்படங்களையும் சேகரித்து, இந்த நாணயங்களை, இந்துமதத்தின் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி இருக்கின்றோம். உருவாக்கி இருக்கின்றோம் என்ற வார்த்தையை விட வகுத்து தொகுத்து இருக்கின்றோம் என்ற வார்த்தைதான் சரியானது.

Because I am Just Reviver...not a reformer. நான் புரட்சியாளன் அல்ல... நான் புனரமைக்கவே வந்துள்ளேன், புரட்சி செய்ய அல்ல ... இதற்கு மேலும் உங்களை காக்கவைக்காமல்... கயிலாயத்தின் நாணயங்களை வெளியிடுகிறேன். கைலாச ரிசர்வ் வங்கி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு குறிப்பிட்ட நாட்டோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்து கொண்டு அந்த நாட்டில் நிறுவியிருக்கிறோம். பல நாடுகளோடு தூதரக ரீதியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எந்தெந்த நாடுகளோடு தூதரக ரீதியான உறவுகள் ஏற்படுத்தபட்டிருக்கின்றதோ அந்த நாடுகளில் இந்த நாணயம் செல்லும். அந்த நாடுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும். இப்போதைக்கு ஒரு பிரதி மாத்திரம் விநாயகசதுர்த்தி என்று சடங்கு ரீதியாக பரம்பொருள் விநாயகப்பெருமானுக்கு அர்ப்பணித்து, பரமசிவ பரம்பொருளுக்கு அர்ப்பணித்து உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதற்காக எடுத்துவந்துள்ளோம். அவை புழக்கத்தில் கூடிய விரைவில் வரும். அப்போது உங்கள் எல்லோருக்கும் அறிவிக்கிறேன். இந்த எல்லா காசுகளும் அந்தந்த காசுகளுக்கான எடையை மட்டும் நிரந்தரமாக வைத்து, ஒரு புறம் பாரம்பரிய காசுகளின் அமைப்பையும் , மறுபுறத்தில் கைலாயத்தின் ராஜாங்கன முத்திரையையும் தாங்கியனவாக இருக்கும். முகமதியர் காலத்தில் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும் கூட இந்து மத தெய்வங்கள் வடிவங்கள் பதிப்பிக்கபட்டு, இந்து மதம் சார்ந்த சில காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த காசுகளின் மாதிரிகளிலும் கூட நாங்கள் நாணயங்களை புனரமைத்துள்ளோம்.

இப்போது அறிமுகம். 1 பொற்காசு - ஒரு தோலா ஒரு தோலா என்றால் 11.6638 கிராம் எடை உள்ள தங்கம். இவைகள் ஒவ்வொரு பொற்காசும் ஒரு தோலா தங்கத்தினாலே செய்யப்பட்டவைகள். ஒரு தோலா தங்கத்தினாலே வடிவமைக்கப் பட்ட ஒரு பொற்காசை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். கைலாயத்தின் கால் காசு. கால் பொற்காசு 2.91 கிராம் எடையுடைய தங்கம்.

பாரம்பரியமாக இந்து தேசங்கள் 56 யிலும் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்து வந்த காசுகளின் படங்கள் இது, அதை நாங்கள் எவ்வாறு புனரமைப்பு செய்திருக்கின்றோம் என்கின்ற காசுககளின் படங்கள் இது... அதாவது இது படம் இது தங்கத்தினால் செய்யப்பட்ட காசு.

1/2 பொன். அரை பொற்காசு, 5.83 கிராம் எடை உள்ளதாக இருக்கும்.

3/4 பொன் முக்கால் பொற்காசு 8.747 கிராம் 5.83 கிராம் எடை உள்ளதாக இருக்கும்.

2 காசு இவை 23.327 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

3 பொற்காசுகளை அறிமுகப்படுத்துகின்றேன். 3 பொற்காசுகள் 34.99 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

4 பொற்காசு. 4 பொற்காசை அறிமுகப்படுத்துகிறேன். 4 பொற்காசு 46.65 கிராம் எடை கொண்டதாக இருக்கும்..

அடுத்ததாக 5 பொற்காசு. இது 5 பொற்காசு 58.31 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

அடுத்ததாக 10 பொற்காசு. 10 பொற்காசு 116.6380 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

இது அத்தனையையும் பரம்பொருள் கணபதி பெருமானின் திருவடிகளிலும் பரமசிவ பரம்பொருளின் திருவடிகளிலும் சமர்ப்பிக்கின்றோம். இந்து மதத்தை இருந்தது இருந்தவாறே உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் விதை வங்கி நிலையிலாவது உயிரோடு வைத்து விட வேண்டும் என்கின்ற எங்கள் எண்ணத்தின், எங்கள் ஓயாத உழைப்பின் உயிர்பெற்ற வடிவம் தான் இந்த கைலாசமும், கைலாச ரிசர்வ் வங்கியும்.

மிக தெளிவா நான் திரும்பவும் சொல்ல விரும்புகின்றேன். நான் இந்தியாவிற்கு எதிரானவன் அல்ல. இந்தியாவில் எந்தவித நிலப்பரப்பு சார்ந்து அல்லது எந்த வித உரிமையையும் நான் கோரவில்லை. எனக்கு இந்தியாவில் இருந்த ஒரே ஒரு உரிமை, குடியுரிமை. அந்த உரிமையும் சட்டவிரோதமாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. I want to put this on record very clearly. இதை மிகத்தெளிவாக உலகத்திற்கு நான் சொல்லிவிட விரும்புகின்றேன். என்மீது 2010 யில் ஒரு பொய்யான முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டது. . அது பதியப்பட்ட உடனேயே எந்த வித விசாரணையும் முகாந்திரமும் இல்லாமல் என்னுடைய பாஸ்போர்ட்டை சரண் ரெட்டி என்கின்ற ஐ பி எஸ் அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் பாஸ்போர்ட் அதிகாரிகள் ரத்து செய்தார்கள். நாங்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிமன்றம் அந்த காவலதிகாரியை கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல், ஒருவர் மீது எந்தவிதமான வழக்குகள் பதியப்பட்டாலும் அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வரும் வரை, அந்த நபருக்கு பாஸ்போர்ட் இருக்க வேண்டும். அவர் பயணம் செய்வதற்கான சுதந்திரம் இருக்க வேண்டுமென்று சொல்லி, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி பாஸ்போர்ட் ரத்து செய்ததை ரத்து செய்து என்னிடமே பாஸ்ப்போர்ட்டை கொடுத்தது. இந்த வழக்குகள் முடியும் வரை நான் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் சுதந்திரமாக பயணம் செய்யலாம் என்ற உரிமை கொடுத்தது. பாஸ்போர்ட் மற்றும் பயணம் செய்வதற்கான உரிமை - இந்த இரண்டையும் நீதிமன்றம் கொடுத்த பிறகு, 2 முறை கயிலாய யாத்திரை உட்பட, பல முறை பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்கு வந்திருக்கின்றேன்.

என்னுடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது, என்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க பாஸ்போர்ட் அதிகாரிகள் மறுத்தார்கள்.

நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை எடுத்துச்சென்று காட்டினோம். ஆனால் அவர்கள் எந்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கவும் தயாராக இல்லை; 'ஏன் நீதிமன்ற தீர்ப்பை மதித்து என் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை' என்ற கேள்விக்கு பதில் சொல்லவும் அவர்கள் தயாராக இல்லை. ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்கள், "உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ.' அப்போதுதான் எனக்கு மிகத் தெளிவாக தெரிந்தது... நீதிமன்றம், நீதி இதெல்லாம் ஹிந்துக்களுக்கு இல்லை என்று !

நீதிமன்றம் தெளிவாக ஆணை பிறப்பித்த பிறகும், பாஸ்போர்ட்டை புதிப்பிக்காமல் என் குடியுரிமையை பறித்தார். இது சம்பந்தப்பட்ட ஆவணங்களை நீங்கள் எல்லோரும் படிக்கும் வகையில் இணைப்பில் தருகிறோம். கீழ்க்காணும் இணைப்பில் நீங்களே சென்று படித்து அறிந்து கொள்ளுங்கள். Passport Related Persecution Link: kailaasa.org/passport-persecution சட்டவிரோதமாக என்னுடைய குடியுரிமை பறிக்கப்பட்டதனால் வேறு வழியில்லாமல் இந்திய சமூகத்திலிருந்து என்னை நான் விலக்கிக்கொள்ள வேண்டியதாக போய் விட்டது. ஏதாவது ஒரு இடத்தில் வாழ்ந்து தான் ஆகவேண்டும். இந்து மதத்திலே, தற்கொலைக்கு அனுமதி இல்லை.

I want to put this on record very clearly. என்னிடமிருந்து என்னுடைய சட்ட ரீதியான அடிப்படை உரிமைகள், நீதிமன்ற தீர்ப்பை தாண்டி சட்டவிரோதமாக பறிக்கப்பட்டன. நானே நேரடியாக பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு போனேன். அவர்கள் சொன்ன பதில் உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ! எனக்குத் தெரிந்ததெல்லாம் மீனாட்சி தான். அம்மா மீனாட்சி என்றேன், அவள் கொடுத்த அருளும் தீர்வும்தான் இந்த கைலாசம். உண்மையில் நான் இந்திய சமூகத்தில் இருந்து துரத்தப்பட்டேன். நானாக வெளியேறவில்லை... துரத்தப்பட்டேன். வேறு வழியில்லாமல், நான் இந்த கைலாயத்தை உருவாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்போதைக்கு இதைத்தான் பதிவிட விரும்புகிறேன்.

பரம்பொருள் கணபதியின் பேரருளாலும் பரமசிவ பரம்பொருளின் பேரருளாலும் நாங்கள் எடுத்திருக்கும் திருப்பணி ஹிந்து மதத்திற்கான ஒரு பாராளுமன்றத்தை நிறுவுதல். ஹிந்து மதத்தின் மதம் சார்ந்த நிர்வாகங்களையும் நிர்ணயங்களையும் கருத்துக்களையும் தொகுத்து உலகிற்கான ஒரு நெறிகாட்டுதல் பாராளுமன்றத்தை உருவாக்குகின்ற வேளையில் இறங்கியிருக்கின்றோம். அடுத்த 6 மாதங்கள் தேவைப்படலாமென்று நினைக்கின்றோம். ஜனவரிக்குள் முடித்துவிட வேண்டுமென்ற குறிக்கோளை வைத்திருக்கின்றோம். ஒருவேளை அடுத்து ஓரிரு மாதங்கள் எடுத்தாலும், சிவராத்திரிக்குள் இதனுடைய முழு வரைவும் மாதிரியும் வெளியிடப்படும்.

வேதங்களிலும் ஆகமங்களிலும் பெருமான் சொல்லி இருக்கின்ற சத்தியங்களை வகுத்து, சித்சபை, ராஜசபை, தேவசபை என்று 5 நிலையாக ஹிந்து பாராளுமன்றத்தின் நிலையை வகுத்திருக்கின்றோம்.

ஐந்து நிலைகளில், முதலில் சித்சபை: சித் என்றால் உயிர், விழிப்புணர்வு. இந்து மதத்தினுடைய உயிர் சார்ந்த எல்லா அறிவியல், சக்தி வெளிப்பாடு பற்றிய எல்லா அறிவியல், பிரபஞ்சத்தின், உண்மைகள், ஞானம், இவைகள் அனைத்தையும், வகுத்து தொகுத்து, முறையாக நிர்வகித்து, உலகத்திற்கு பகிர்ந்தளிக்கும் ஒரு அமைப்பாக சித்சபை இருக்கும். இந்த அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் தான் மற்ற நான்கு சபைகள் இயங்கும். உலகத்தினுடைய, ஞான அறிவியலின் 'மூலம்' வேதங்களும் ஆகமங்களும். இந்த இந்துமதத்தின் பிரபஞ்ச அறிவியலை தானே அனுபவித்து மற்றவர்களுக்கும் அளிக்கின்ற விருப்பத்தோடு இருக்கும் மிகப்பெரிய ஞானிகள், குருமார்கள், அவதார புருஷர்கள் சன்யாசிகள், பீடாதிபதிகள் என இந்துக்களுடைய பிரதிநிதிகள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இந்த சித்சபை அமையும். இவர்கள் அனைவரையும் வேண்டி, வணங்கி, வரவேற்கப்போகிறோம். சித் சபை "இந்து அருளாட்சி" சார்ந்த கருத்துக்களை உலகத்திற்கு அளிக்கும்.

அடுத்தது ராஜசபை. பல நாடுகளில், இந்து மதம் சார்ந்த கருத்துக்களை அரசியல் ரீதியாக, சட்டரீதியாக செயல்படுத்துவதற்கு, பல நாட்டினுடைய ஹிந்து தலைவர்கள், இந்து மதத்தின் மீது அபிமானம் கொண்ட நபர்கள், இந்து மதத்தின் மீது விருப்பம் கொண்ட அரசியல் தலைவர்கள் இவர்களையெல்லாம் வரவேற்று, இவர்களோடு எல்லாம் பாகமாக செயல்படும் ஒரு பொறுப்புடைய ஜனநாயக அமைப்பாக இந்த ராஜசபை திகழும். ராஜசபை, "இந்து அரசாட்சி" சார்ந்த கருத்துக்களை உலகத்திற்கு அளிக்கும்.

மூன்றாவதாக, இந்து தேவசபை : வேதங்களிலும் ஆகமங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற இந்து மதம் சார்ந்த மிக உயர்ந்த நிர்வாக கருத்துக்களை வகுத்தும் தொகுத்தும் வழங்கும் அமைப்பாக இந்து தேவசபை இருக்கும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை, தன்னுடைய வாழ்க்கையும் மற்றவர்களுடைய வாழ்க்கையும் முறையாக நிர்வகித்து கொள்ளும் வழிமுறை போன்ற மிக அருமையான நிர்வாக கருத்துக்களை தாமே வாழ்ந்து உயர்நிலையை அடைந்து, அதை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களுடைய வாழ்வையும் வளப்படுத்தும் நபர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு சிந்தனையாளர்கள் கூடமாக இந்த தேவசபை அமையும்.

அடுத்தது கனகசபை: இந்து மதத்திலே 'சொத்துகள்' என்பது வெறும் பணம் சார்ந்தது மட்டும் அல்ல. வாழுகின்ற வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விதமான வளங்கள் அதாவது மனித வளம், தானியங்கள் போன்ற விளைபொருள் வளம், எரிபொருட்கள், கனிமங்கள் போன்ற இயற்கை வளம், மின்சாரம் போன்ற உற்பத்தி வளம் இவைகள் எல்லாமே வளம் சார்ந்தவைதான் ! இதைச் சார்ந்த வல்லுநர்களை ஒருங்கிணைத்து, இவை குறித்த அறிவை ஒன்றாக்கி வகுத்து, தொகுத்து, தெளிவாக்கி இந்த உலகில் உள்ளவர்களுக்கு எல்லாம் பகிர்ந்து கொள்வதற்கான திட்டமும், அதற்கான அமைப்பு முறையும்தான் கனகசபை.

இறுதியாக, நித்தியானந்த சபை இந்த சபை, மகா கைலாசத்தின் நிர்வாகத்தை முறைப்படுத்தி, ஆனந்தமான வாழ்க்கை முறை சார்ந்த அறிவியலை தானும் அனுபவித்து உலகம் அனைத்திற்கும் கொண்டுசென்று சேர்த்து மற்றவர்களையும் அனுபவிக்க வைக்கின்ற பொறுப்புடைய நபர்கள் பங்கெடுக்கும் பொறுப்புடைய ஜனநாயக அமைப்பாக இருக்கும். இந்த ஐந்து சபைகளும் ஒன்றாக சேர்ந்ததுதான் 'இந்து பாராளுமன்றம்' என்று குறிப்பிடுகின்றேன்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இந்த ஒவ்வொரு நிலையிலும், அதற்கான சிறப்பு நபர்களுடைய கருத்துக்களை பெறுவதுடன், அந்த நபர்களே உறுப்பினர்களாக இருக்கின்ற வகையில் இந்த கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு சபையும் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கூட வேண்டும், எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை சபையின் உறுப்பினர்கள் புதுப்பிக்கப்படுவார்கள், அப்படி புதுப்பிக்கப்படுவதற்கான நெறிமுறை என்ன இவைகள் எல்லாவற்றையும் வகுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த இந்து பாராளுமன்றத்தின் ஒவ்வொரு சபையிலும் 1008 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆறு மாதங்களுக்குள், உறுப்பினர்கள் பெயர் உட்பட, இந்த மொத்த வகுத்து தொகுக்கப்பட்ட கருத்துக்களையும் உங்கள் முன்பாக வைக்கின்றேன். பரமசிவம் பரம்பொருளின் பேரருளால், பரம்பொருள் விநாயகனின் பேரருளால், இந்தத் திட்டத்திலும் வெற்றி அடைந்தே தீருவோம். உங்கள் எல்லோருடைய அன்பையும், ஆசிகளையும் வேண்டுகின்றேன்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது இதைப்பற்றி கேள்விப்படுபவர்கள், இந்து மதத்தினுடைய பொருளாதாரக் கொள்கையை சார்ந்தோ அல்லது இந்த இந்து பாராளுமன்றம் சார்ந்தோ உங்களுடைய ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை எங்களுக்குப் பகிரலாம். அவை எல்லாவற்றையும் மிகுந்த பணிவோடு வரவேற்கின்றோம். நீங்கள் கொடுக்கிற ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்களுடைய பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி, இப்போது வகுத்துக் கொண்டு இருக்கின்ற எங்களுடைய தர்மசாஸ்திரத்தின் பாகமாக அதை மாற்றி கொள்ளுகின்றோம். தேர்ந்தெடுக்கப்படுகின்ற அறிவுரைகளுக்கும் சிறப்பான பங்களிப்புக்கும் 'கைலாச ரத்னா' விருது அளிக்கப்படும். 'கைலாச ரத்னா விருது, கைலாசத்தின் நூறு பொற்காசுகள் சேர்ந்ததாக இருக்கும். உங்களுடைய அறிவுரைகள் ஆலோசனைகள் பங்களிப்புகளை [email protected] என்ற ஈமெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

கைலாயத்தின் E-Passport மற்றும் E-Citizenship (குடியுரிமை) இலவசமாக அனைவருக்கும் வழங்குகின்றோம்.

வேண்டுவோர் kailaasa.org/free-epassport என்ற இணைப்பிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். பரமசிவ பரம்பொருளின் பேரருளோடும் பரம்பொருள் கணபதியின் பேரருளோடும் கைலாசத்தை உருவாக்கும் முயற்சியில் தங்களுடைய நேரம், உழைப்பு, வளங்கள் அனைத்தையும் பங்களித்து எனக்கு உதவியாக இருக்கும் உங்கள் அனைவரையும் நன்றியோடு வணங்குகின்றேன்.

இப்போதைய அனைவருடைய கேள்வியும் இதுதான்: கைலாசம் எங்கிருக்கிறது !? கூடிய விரைவில் அறிவிக்கிறேன்…. உங்களையெல்லாம் நேரில் சந்திக்க தேவையான எல்லா சாத்தியத்தையும் நடைமுறைபடுத்திய பிறகு நிச்சயமாக அறிவிக்கிறேன். இதை உங்கள் எல்லோருக்காகவும் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் ! அறிவிப்பது மட்டுமல்லாமல் உங்கள் அனைவரையும் வரவேற்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறது கைலாஸம். உங்கள் அனைவரையும் வரவேற்க நானும் காத்திருக்கின்றேன். மனித இனமே, நீ என்னை நோயாளியாக்க முயற்சித்தாலும், நான் என்றென்றும் உனக்கு ஆரோக்கியத்தை அளித்துக் கொண்டே இருப்பேன்.

நீ என் குடியுரிமையை சட்டவிரோதமாக பறித்தாலும், நான் உனக்கு குடியுரிமை மட்டுமல்லாது, ஆனந்தமாக பூமியில் வாழ அறிவியலையும் சேர்த்து அளித்து கொண்டே இருப்பேன். எனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டாலும் உலகம் அத்துணைக்கும் அளிப்பது என் கடமை ... அடுத்ததாக மிக முக்கியமான ஒன்று, கைலாயத்தின் ராஜாங்கன முத்திரையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இது கைலாயத்தின் இராஜமுத்திரை. பரமசிவ பரம்பொருளும் பராசக்தியும் சிம்ஹாசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுடைய அடியவனாக அவர்கள் காலடியில் நான் அமர்ந்திருக்கும் இந்த முத்திரை தான் கைலாயத்தின் இராஜமுத்திரை. கைலாயத்தின் எல்லா அரசாங்க நடவடிக்கைகளிலும் அரசாங்க முத்திரையாக, இராஜமுத்திரையாக உபயோகப்படுத்தப்படும். கைலாயத்தின் அரசாங்க நிர்வாகம் சார்ந்த அனைவரும் அவரவர்களுக்கு அளிக்கப்படுகின்ற பொறுப்புக்களை சார்ந்து இந்த இராஜமுத்திரையை மோதிரமாகவோ அல்லது கழுத்தில் மாலையாகவோ அணிந்திருப்பார்கள். 'என்னய்யா அப்படின்னா உண்மையிலேயே ஒரு நாட்டையே கட்டி ராஜாங்கமே நடத்திக்கிட்டு இருக்கிறாரா, எப்படி ஒரு தனிமனுசன் இப்படி செய்றாரு', social media வில் இது பெரிய talk ... ஹே ! இது இன்னைக்கு நேத்து நான் கண்டுபிடிச்சது இல்லப்பா... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு 'வேலை' மாத்திரம் கையில் தாங்கி, கடல் கடந்து நாடுகளெல்லாம் சென்று சைவத்தை வேளாண்மை செய்த சைவ வேளாளன் நான்!!!

நான் கருவழி பரம்பரையால் சைவ வேளாளர் சோழர்-வம்சம், குருவழி பரம்பரையால் பாண்டியர்கள் மதுரை ஆதீன வம்சம், என் கருவழி பரம்பரையான சோழருக்கும், குருவழிப் பரம்பரையான பாண்டியருக்கும், நான் செய்யும் சமர்ப்பணம் இந்த கைலாய தேசம்.

இந்த கைலாயம் நான் நேற்று, இன்று செய்ததல்ல.. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு வேல் மாத்திரம் கையில் தாங்கி, கடல் கடந்து நாடுகள் எல்லாம் சென்று, சைவத்தை வேளாண்மை செய்த சைவ வேளாளர் வழி வந்தவன். கருவழி பரம்பரையால், சைவ வேளாளர் சோழர்-வம்சம், குருவழி பரம்பரையாய் பாண்டியர்கள் மதுரை ஆதீன வம்சம், என் கருவழி பரம்பரையான சோழருக்கும், குருவழிப் பரம்பரையான பாண்டியருக்கும், நான் செய்யும் சமர்ப்பணம் இந்த கைலாய தேசம்.

எங்கிருந்தாலும் வாழ்ந்தே தீருவோம், சைவத்தை வேளாண்மை செய்தே தீருவோம். எங்கிருந்தாலும் வாழ்ந்தே தீருவோம், சைவத்தை வேளாண்மை செய்தே தீருவோம் !

வெறும் ஒற்றை வேல் தாங்கி, முருகனின் பெயரை நெஞ்சில் தாங்கி, கடல் கடந்து சென்று, சைவ வேளாண்மை செய்து, சென்ற நாட்டில் எல்லாம் அந்த 'வேலை' நட்டு, சைவத்தை வேளாண்மை செய்த குலம் சைவ வேளாளர் குலம். அதனால தான் கடல் தாண்டி உலகம் முழுக்க இருக்குற எல்லா நாட்டினுடைய ஆதி ஆலயங்களையும் பார்த்தால், அது பத்துமலை முருகன் ஆகட்டும், நல்லூர் கந்தன் ஆகட்டும் எந்த விக்கிரகமும் இருக்காது, கடல் கடந்து சென்ற எங்கள் முன்னோர்கள் தாங்கிச் சென்ற வேலாக மட்டும் தான் இருக்கும். காக்கும் கனக வேல் தாங்கி கடல் கடந்தும் சைவத்தை வேளாண்மை செய்தவர்கள் நாங்கள். கருவழி பரம்பரையால் சோழரின் பேரருளும், குருவழி பரம்பரையால் பாண்டியனின் பேரருளும்... இவர்களின் அருளும் ஆசியும் இருப்பதனால் கைலாயம் செய்தே தீருவோம் !!!

பரமசிவ பரம்பொருளின் பேரருளால், பரம்பொருள் கணபதியின் பேரருளால் உண்மையில் திருக்கயிலாயம் செய்து முடித்துவிட்டோம்... நேரம் வரும்போது செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ... இப்போதைக்கு இது classified information.

என்றாவது ஒருநாள் என் தமிழ் இந்துக்கள் என் தியாகத்தை புரிந்து கொள்வார்கள் ... நான் எடுத்த முடிவுகளும் செய்த செயலும் சரி என்று உணர்ந்து கொள்வார்கள் ... அது போதும் எனக்கு !!! போற்றுவார் போற்றிட தூற்றுவார் தூற்றிட எதைப்பற்றியும் கவலை இல்லாது செய்யவேண்டியதை செய்துகொண்டே இருப்பேன்.

விநாயக பெருமானை நம் உயிரில் மலரவைக்கும் மந்திரங்களை கேட்கலாம். தியானத்திற்குள் நுழையலாம்.


படங்கள்



தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "